Monday, May 28, 2012

சரியும் ரூபாய் மதிப்பு... மக்களுக்கு என்ன பாதிப்பு?


நமது பணமான ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்து கொண்டிருக்கிறது. முன்பெல்லாம் 10 பைசா சரிந்தது அல்லது உயர்ந்தது என்றுதான் செய்தி வரும். ஆனால், இப்போது அதுவே தலைப்புச் செய்தியாக மாறுகிற அளவுக்கு ரூபாயின் மதிப்பு படுபயங்கரமாக குறைந்திருக்கிறது. டாலருக்கு எதிராக ரூபாய் கடந்த 3 மாதத்தில் 11 சதவிகிதம் குறைந்துள்ளது. சரி, ரூபாயின் மதிப்பு குறைவதால் சாதாரண மக்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்று கேட்கிறீர்களா? இதே கேள்வியைத்தான் நாம் பொருளாதார பேராசிரியர் ஸ்ரீனிவாசனிடம் கேட்டோம். விளக்கமாகவே எடுத்துச் சொன்னார் அவர்.
''ரூபாய் மதிப்பு மக்களை எப்படி பாதிக்கிறது என்பதை பார்ப்பதற்கு முன், ரூபாய் மதிப்பு எப்படி சரிவடைந்தது என்பதை முதலில் பார்ப்போம். அமெரிக்கப் பணமான டாலரின் தேவை எவ்வளவு, ரூபாயின் தேவை எவ்வளவு என்பதைப் பொறுத்து ரூபாயின் மதிப்பு நிர்ணயம் செய்யப்படுகிறது. இப்போதைக்கு இந்தியாவுக்கு உள்ளே வரும் டாலரின் அளவு குறைந்துகொண்டே இருக்கிறது. அதேசமயம், இந்தியாவில் இருந்து வெளியே செல்லும் டாலரின் அளவு அதிகரித்தபடி இருக்கிறது. இதனால், டாலருக்கு ஏற்படும் டிமாண்ட் காரணமாக டாலரின் மதிப்பு ஏகத்துக்கு உயர, இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிகிறது.
ரூபாயின் மதிப்பு சரிய முதல் காரணம், இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை அதிகமாகிக் கொண்டே போவது தான். அதாவது, இந்தியாவின் ஏற்றுமதியைவிட இறக்குமதி அதிகமாக இருக்கிறது. உதாரணமாக, நாம் ஆண்டுக்கு 800 டன் தங்கத்தை இறக்குமதி செய்கிறோம். இந்த தங்கத்தை டாலர் கொடுத்துதான் வாங்க வேண்டும். மேலும், இந்த பற்றாக்குறையை பேலன்ஸ் ஷீட்டில் சரிசெய்ய அதிகளவு வெளிநாட்டு கரன்சிகளை கடன் வாங்குகிறோம். அதுவும் குறுகிய கால கடன்களாக.
நீண்ட காலத்தில் கடன் வாங்கினால் குறைந்த வட்டியி லாவது கடன் கிடைக்கும். ஆனால், குறுகிய காலத்தில் கடன் வாங்கினால், அதிக வட்டியைத் தரவேண்டி யிருக்கும். இதனால் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் இந்தியாவை பற்றிய நம்பிக்கை குறையும்.
ஒரு தொழில் அல்லது ஒரு நாட்டின் பொருளாதாரம் சிறப்பாக இருக்கிறது என்றாலே அதன் மீது மக்களுக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது என்று அர்த்தம். நாம் அந்த நம்பிக்கையை இழந்து கொண்டே வருகிறோம். உதாரணமாக, ஒரு வங்கியில் வீட்டுக் கடன் வாங்கி, வீடு கட்டினால் அதை யாரும் குறை சொல்ல மாட்டார்கள். ஆனால், கந்து வட்டிக்கு கடன் வாங்கி வீடு கட்டும் ஒருவரை யாராவது புகழ்ந்து பேசுவார்கள் என்று எதிர்பார்க்க முடியுமா? வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இன்றைக்கு நம்மை அப்படித் தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதன் காரணமாக நமது நாட்டுக்கு வரும் அந்நிய முதலீடு குறைந்துகொண்டே வருகிறது. 2010-ம் ஆண்டு சுமார் 3,000 கோடி டாலர்கள் அளவுக்கு இந்திய சந்தையில் அந்நிய முதலீடு இருந்தது. 2011-ல் 300 மில்லியன் டாலர்கள் அளவுக்கு அதிலிருந்து பணத்தை வெளியே எடுத்தார்கள். டாலர் வரத்தே இல்லாமல் போனதால் ரூபாய் மதிப்பு சரிவது தவிர வேறு வழி இல்லாமல் போனது.  
அடுத்த முக்கிய காரணம், என்.ஆர்.ஐ. டெபாசிட்கள். அவர்களுக்கு அதிக வட்டி கொடுக்கிறோம் என்பதெல்லாம் சரிதான். அதற்காக அவர்கள் முதலீடு செய்வார்களா என்றால் உறுதியாகச் சொல்ல முடியாது.
ஒரு டாலர் 54 ரூபாய் இருக்கும்போது முதலீடு செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்களுக்கு கவர்ச்சிகரமான வட்டி கிடைக்கிறது. ஆனால், திரும்ப எடுத்து செல்லும்போது 58 ரூபாய் கொடுத்தால்தான் ஒரு டாலர் அவர்களுக்கு கிடைக்கும். அப்படியானால் அவர்கள் இங்கு எவ்வளவு லாபம் சம்பாதித்தார்களோ, அது அத்தனையையும் ரூபாய் மதிப்பின் சரிவின் காரணமாக இழந்துவிடுவார்கள். இதற்கு,  அவர்கள் இருக்கும் நாட்டிலே குறைந்த  வட்டிக்கு முதலீடு செய்து விடலாம். வெளிநாட்டு முதலீடு குறைவாக இருக்கிறது என்பதால்தான், இங்கிருக்கும் ஏற்றுமதியாளர்களிடம் டாலர்களை விற்க சொன்னது ஆர்.பி.ஐ.
இந்த மாதிரியான நிச்சய மின்மைகள் இருக்கும்போது, முதலீட்டாளர்கள் சந்தையி லிருந்து கொஞ்சம் ஒதுங்கி நிற்கவே விரும்புவார்கள். இதனால், ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்திருக்கிறது.
சரி, ரூபாயின் மதிப்பு சரிந்திருப்பதால் சாமானிய மக்களுக்கு என்னென்ன பாதிப்பு ஏற்படும் என்று பார்ப்போம். மேலோட்டமாக பார்த்தால், இதற்கும் சாதாரண மக்களுக்கும் சம்பந்தமில்லை என்பதுபோல் தெரியும். ஆனால், கொஞ்சம் ஆழமாக பார்த்தால், இதனால் சாதாரண மனிதர்களுக்கு பல பாதிப்பு ஏற்படும். காரணம், நாம் இன்னமும் பல பொருட்களை இறக்குமதி செய்து கொண்டு தான் இருக்கிறோம்.
அதில் முக்கியமானது கச்சா எண்ணெய். ரூபாயின் மதிப்பு சரிந்திருக்கும் இந்த வேளையில்  உலகளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பதினால் விலை உயராமல் இருக்கிறது. ஒரு வேளை கச்சா எண்ணெயின் விலை உயர்ந்தால் இந்தியச் சந்தையில் பெட்ரோல், டீசல் விலை உயரும். இது உயரும்பட்சத்தில் போக்கு வரத்துக் கட்டணம் உயரும். அதனால் நாம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களில் விலை உயர வாய்ப்பிருக்கிறது. காய்கறி விலைகள் இன்னும் உயரும்.
ரிசர்வ் வங்கியின் அறிக்கைபடி நாம் சமையல் எண்ணெய், ரப்பர், சர்க்கரை, உரங்கள், பேப்பர், ஸ்டீல், எலெக்ட்ரானிக்ஸ், கேப்பிட்டல் கூட்ஸ் மற்றும் ஆட்டோமொபைல் துறைக்கு தேவையான மூலப் பொருட் களை இறக்குமதி செய்கிறோம். இதில் சமையல் எண்ணெய், சர்க்கரை போன்றவை நம்மை நேரடியாகப் பாதித்தாலும், ரப்பர், உரம் போன்றவை நேரடியாக பாதிப்பு ஏற்படுத் தாமல், சுற்றி வளைத்து பாதிப்பு ஏற்படுத்துபவை.
கம்ப்யூட்டர், செல்போன் போன்ற எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களையும் நாம் இறக்குமதி செய்து வருவதால் அந்த பொருட்களின் விலையும் கணிசமாக உயர்வதற்கு வாய்ப்பிருக்கிறது.
மேலும் விலைவாசி உயரும் போது பணவீக்கம் அதிகரிக்கும், பணவீக்கம் அதிகரிக்கும்போது வட்டி விகிதம் மீண்டும் உயரும்; இதனால் வளர்ச்சி குறையும், வேலை வாய்ப்புகள் குறையும். இப்படி பல பிரச்னைகள் உருவாகும்'' என்றார்.
ரூபாயின் மதிப்பு சரிந்து விட்டது. இனி, அதன் மதிப்பு உயர என்னதான் செய்ய வேண்டும் என்று அவரிடம் கேட்டோம். ''இரண்டு விஷயங்களால்தான் ரூபாயை உயர்த்த முடியும். முதலாவது, நம் பொருளாதாரத்தை சீர் தூக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு மிக வேகமாகச் செயல்பட வேண்டும். இல்லையென்றால் நமது பொருளாதாரத்தைவிட மற்ற நாடுகளின் பொருளாதாரம் மோசமாக வேண்டும். இரண்டாவது விஷயத்தைச் செய்ய நம்மால் முடியாது. முதல் விஷயத்தைச் செய்வதற்கு  வேண்டுமானாலும் முயற்சித்துப் பார்க்கலாம்! எல்லாம் நம்மை ஆளுகிறவர்களின் கைகளில் இருக்கிறது'' என்று முடித்தார் சிரித்தபடி.
எதையாவது செய்து ரூபாயின் சரிவைத் தடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் நாம். என்ன செய்யப் போகிறார்கள் நம்மை ஆளும் அரசியல்வாதிகள்?

No comments:

Post a Comment