Friday, October 14, 2011

கூடங்குளம்: போராட்டத்திற்கு ஆதரவு தொடரும் மனிதநேய மக்கள் கட்சி

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ. வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
கூடங்குளம் அணு மின் நிலையப் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்ற தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்தாததால் கூடங்குளம் அணு மின் நிலைய பணிகள் தொடரும் சூழலில் போராட்டக் குழுவினர் மீண்டும் போராட்டத்தை தொடர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு ஆதரவான சக்திகள், அணு மின் நிலையத்தால் பாதிப்பு  ஏற்படாது என பொய் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள நிலையில் கூடங்குளம் மக்களின் போராட்டத்திற்கு தொடர்ந்து தார்மீக ஆதரவை வழங்க மனிதநேய மக்கள் கட்சி முடிவு செய்துள்ளது.
1986ல் ரஷ்யாவின் செர்நோபில் அணு உலை விபத்து, பெரும் பேரழிவை ஏற்படுத்தியது. தனது சொந்த மக்களையே காப்பாற்ற முடியாத ரஷ்யாவின் அணு உலையை கூடங்குளத்தில் பாதுகாப்பாக செயல்படுத்துவோம் என மத்திய அரசு சொல்வது வேதனைக்குரியதாகும்.
அறிவியல் முன்னேற்றத்தில் முன்னணியில் உள்ள ஜப்பானின் புகுஷிமாவில் சமீபத்தில் நிகழ்ந்த அணு உலை விபத்தின் பாடங்களைக் கூட மறந்து மக்களின் உயிரோடு விளையாடும் போக்கு தொடரக்கூடாது.  ஆந்திர மாநில நாகார்ஜுனா சாகரிலும், கர்நாடக மாநில கைக்காவிலும், கேரள மாநிலம் பூத்தான் கெட்டு பகுதியிலும் இருந்து மக்கள் போராட்டத்தால் 1992ஆம் ஆண்டே விரட்டியக்கப்பட்ட இந்த திட்டம் நிறுத்தப்பட வேண்டும்.
தென் தமிழக மக்களின் உயிரோடு விளையாடும் வறட்டுப் பிடிவாதத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்வதுடன், களத்தில் நின்று போராடும் போராட்டக் குழுவினருக்கு மனிதநேய மக்கள் கட்சி வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறது.

(எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்)

No comments:

Post a Comment