Saturday, August 13, 2011

‘லோக் ஆயுக்தா’ தமிழகத்துக்கும் வேண்டும்

ர்நாடக மாநிலத்தில் தனிப்பெரும்பான்மையுடன் கோலோச்சி வந்த பாரதிய ஜனதா கட்சியின் முதல்வர் எடியூரப்பாவை பதவி விலக வைத்ததற்கு அம்மாநில ‘லோக்  ஆயுக்தா அமைப்பு வெளியிட்ட விசாரணை அறிக்கைதான் காரணம். முந்தைய ஆட்சியாளர்கள் மீது வரும் புகார்களை விசாரிக்க ‘லோக் ஆயுக்தா’ தமிழகத்துக்கும்  வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியுள்ளது.
இந்தியாவில் லஞ்ச ஊழலை அகற்றி வெளிப்படையான நிர்வாகத்தைக் கொண்டு வருவதற்காக  பிரதமரையே விசாரிக்கும் அதிகாரம் கொண்ட லோக்பால் மசோதாவைக்  கொண்டு வரவேண்டும் என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தலைமையிலான குழுவினர் தொடர்ந்து  முயற்சிகள் செய்து வருகின்றனர். மத்திய அரசின்  அமைச்சர்கள், அதிகாரிகளை விசாரணை வரம்புக்கு உட்படுத்தும் அமைப்பு லோக்பால் என்றால்,  மாநில அளவில் உள்ள முதலமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்,  வாரியத் தலைவர்கள், அரசுக் கழகங்களின் தலைவர்கள், கூட்டுறவுச் சங்கங்களின் தலைவர்கள், உயர் அதிகாரிகள் போன்ற யாரைப் பற்றி புகார் கொடுத்தாலும் விசாரித்து  நடவடிக்கை எடுக்கும் அமைப்பே ‘லோக் ஆயுக்தாவாகும்.

‘லோக் ஆயுக்தா’ மூன்று நபர்கள் கொண்ட ஒரு அமைப்பு. இதன் தலைவராக உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி அல்லது உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி  நியமிக்கப்படுவார். உறுப்பினர்களாக மாநில அரசின் விஜிலன்ஸ் கமிஷனர் மற்றும் நீதித்துறை அல்லது ஆட்சிப்பணிகளில் தலைசிறந்த எவராவது ஒருவர்  நியமிக்கப்படலாம்.



இந்தியாவில் முதன்முதலில் ‘லோக் ஆயுக்தா’ 1962-ம் ஆண்டு அறிமுகமானது. மொரார்ஜிதேசாய் தலைமையில் இந்தியாவில் அமைக்கப்பட்ட நிர்வாக சீரமைப்பு கமிட்டி  பல சிபாரிசுகளைக் கூறி இருந்தது. அதில் ஊழலைக் கட்டுப்படுத்த மத்திய அளவில் லோக்பால் அமைப்பையும், மாநில அளவில் லோக் ஆயுக்தா அமைப்பையும் உரு வாக்க வேண்டும் என்று கூறி இருந்தது. அதைப் பல மாநிலங்கள் கண்டு கொள்ளவில்லை. ஆனால் 1983-ம் ஆண்டு கர்நாடகாவில் நடைபெற்ற பொதுத்தேர்தலின் போது  ஜனதா கட்சி நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ‘லோக் ஆயுக்தா’ அமைப்பை உருவாக்கி லஞ்ச ஊழலுக்கு முடிவுகட்டுவோம் என தங்கள் தேர்தல் அறிக்கையில் தெரிவித்தி ருந்தது. அதன்படியே 1984-ம் ஆண்டு கர்நாடக முதல் அமைச்சராகப் பொறுப்பேற்ற ராமகிருஷ்ண ஹெக்டே முதன்முதலாக ‘லோக் ஆயுக்தா’ அமைப்பை உருவாக்கினார்.

இதையடுத்து, பல மாநிலங்களும் லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்கின. தற்போது ஆந்திரா, அஸ்ஸாம், டெல்லி, குஜராத், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், மராட்டியம்,  ஒடிசா, பீகார், சத்தீஸ்கார், ஹரியானா, இராஜஸ்தான், கேரளா, உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம்  உள்ளிட்ட 17 மாநிலங்களில் ‘லோக் ஆயுக்தா’ அமைப்பு செயல்பட்டு வருகிறது.

மற்ற மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைப்பு பெயரளவுக்குச் செயல்பட்டாலும் கர்நாடகாவில் உள்ள ‘லோக் ஆயுக்தா’ மட்டும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இந்த  அமைப்பிடம் யார் வேண்டுமானாலும் புகார் கொடுக்கலாம். முதல் அமைச்சர்  உள்ளிட்ட யார் மீது புகார் கொடுத்தாலும் அதைப் பதிவு செய்து விசாரணை நடத்தும். 
அதில் தவறுகள் கண்டு பிடிக்கப்பட்டால் அதன்மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு அல்லது கோர்ட்டுக்கு சிபாரிசு செய்யும். இதன் அடிப்படையில் அரசோ அல்லது  கோர்ட்டோ நடவடிக்கை எடுக்கும்.

கர்நாடக ‘லோக் ஆயுக்தா’, நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தலைமையில் செயல்பட்டு வருகிறது.  கர்நாடகாவில் சட்ட விரோத சுரங்கங்கள் குறித்து விசாரணை நடத்திய  இந்த அமைப்பு, முதல் அமைச்சராக இருந்த  எடியூரப்பா, அமைச்சர்கள், முன்னாள் முதல்வர் குமாரசாமி, காங்கிரஸ் முன்னாள் அமைச்சர்கள்  உள்ளிட்ட பலர் மீது  புகார் கூறி இருக்கிறது. இது அவர்களுக்கு கடும் சிக்கலை உருவாக்கி உள்ளது. சந்தோஷ் ஹெக்டே நீதிபதியாக வந்ததற்குப் பிறகு பல ஊழல் புகார்களை விசாரித்து  பலரைச் சிக்க வைத்துள்ளார். இதனால் கர்நாடக அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் நடுக்கத்துடன் உள்ளனர். இந்த ஜூலை 31-ம் தேதியுடன் சந்தோஷ் ஹெக்டேயின்  பதவிக்காலம் முடிவடைந்துள்ளதால் அவரது இடத்துக்கு நீதிபதி சிவராஜ்பாட்டீல் புதிய நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

லோக் ஆயுக்தாவுக்கு ஊழலில்  ஈடுபட்டுள்ளவர்கள் மீது நேரடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரம் இல்லாவிட்டாலும், சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்பட்டுவரும்  அதிகாரவர்க்கத்தினரின் சுயரூபத்தை வெளிப்படுத்த முடிகிறதே என்ற திருப்தி சமூக ஆர்வலர்கள் மத்தியில் உள்ளது என்னவோ மறுக்கமுடியாத உண்மையாகும்.

தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி கடந்த ஆட்சிக்காலங்களில் நடைபெற்ற பல்வேறு மோசடிகள், நில அபகரிப்புப் புகார்கள் போன்றவை அனுமார் வால்போல  நீண்டு கொண்டே செல்கிறது. இதற்கு நிரந்தரத் தீர்வு தமிழகத்திலும் ‘லோக் ஆயுக்தா’ அமைப்பு வேண்டும் என்பதே. 

இதுகுறித்து சமூக ஆர்வலரும், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான சுதன், “லோக் ஆயுக்தா அமைப்பு அதிகாரம் பொருந்தியதாக இருக்கவேண்டும் என்பதே  அனைவரது விருப்பமாகும். ஆந்திராவில் ‘லோக் ஆயுக்தா' அமைப்புக்கு அதிகாரம் இல்லை என நீதிபதி ஆனந்தரெட்டி  வெளியிட்டுள்ள கருத்தை  சீர்தூக்கிப் பார்க்க  வேண்டும். அந்த மாநிலத்தில் உள்ள அமைச்சரும், ‘லோக் ஆயுக்தா’வின் உறுப்பினருமான சங்கர்ராவ் என்பவரின் சொத்து குறித்து ‘லோக் ஆயுக்தா’ விசாரணை நடத்த  நீதிபதி ஆனந்தரெட்டி உத்தரவிட்டார்.  ஆனால்  அமைச்சர் இந்த விசாரணைக்கு ஒத்துழைப்புக் கொடுக்க மறுக்கிறார் என்ற செய்தி இந்த அமைப்புக்கு அதிக  அதிகாரங்கள் வேண்டுமென்ற கருத்துக்கு வலுவூட்டியுள்ளது. தமிழகத்திலும் லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் இப்போது உரு வாகியுள்ளது. இதற்கான விழிப்புணர்வுப் பிரசாரங்களை நாங்கள் விரைவில் தொடங்க உள்ளோம்’’ என்றார்.

‘லோக் ஆயுக்தா’ அமைப்பை இந்தியா முழுவதிலும் உள்ள மாநிலங்களில் உருவாக்கி அதை அதிகாரம் பொருந்திய அமைப்பாக மாற்றும் பட்சத்தில் ஊழல் செய்யும்  அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு அது சிம்மசொப்பனமாக விளங்கும் என்பது உறுதி!

No comments:

Post a Comment