Friday, August 26, 2011

முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டும் மமக சட்டமன்றத்தில் கோரிக்கை

முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லா: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தமிழ்நாட்டில் செயல்பாட்டில் உள்ள இட ஒதுக்கீடு முறை நியாயமாக உள்ளது என்றும் இதில் creamy layer எனும் வளமான பிரிவினரை நீக்கும் அவசியம் இல்லை என்ற தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரையை  ஏற்று தமிழகத்தில் வளமான பிரிவினரை நீக்காமல் 69 சதவிகித இட ஒதுக்கீட்டை உறுதி செய்த சமூக நீதி காத்த மாபெரும் வீராங்கனை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக மனமாரப் பாராட்டுகிறேன்.

தமிழகத்திலே பிற்படுத்தப்பட்டோர்களுக்கான இட ஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு தனியாக 3.5 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த இட ஒதுக்கீட்டின் அளவு அதிகரித்துத் தரப்படுமென மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், அனைத்திந்திய அண்ணா திராவிர முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது திருச்சியிலிருந்து தொடங்கி பல்வேறு இடங்களிலே வாக்குறுதி தந்தார்கள். இதனை உடனே நிறைவேற்றித் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முஹம்மத் ஜான்: பேரவை தலைவர் அவர்களே, சிறுபான்மை மக்களுக்கு அளிக்கப்படும் இடஒதுக்கீடு குறித்து வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்படும் என்று மாண்புமிகு முதலமைச்சர் உறுதியளித்துள்ளார். இந்தக் கோரிக்கை குறித்து அரசு பரிசீலிக்கும்.
முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லா: தற்போது பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்த நடைமுறையில் உள்ள இன சுழற்சி முறையில், Roaster - ல் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. இதன் காரணமாக சில துறைகளில் குறிப்பாக மருத்துவ மேல் படிப்புகளிலும் பல்கலைக்கழப் பேராசிரியர் நியமனங்களிலும் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு வாய்ப்பு இல்லாத சூழல் உள்ளது. இதனைச் சீர் செய்ய இந்த அரசு நடவடிக்கை எடுப்பதுடன் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றது என்பதைக் கண்காணிக்க சட்டமன்ற உறுப்பினர்களும் இடம் பெறும் குழு அமைக்கப்பட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

No comments:

Post a Comment