Monday, June 18, 2012

குடியரசுத் தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்?


லஷ்மண பெருமாள்
ஜூலை 19 அன்று இந்தியாவின் 13வது குடியரசுத் தலைவருக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இரு தினங்களுக்கு முன்னால், மமதாவும் முலாயம் சிங்கும் இணைந்து அப்துல் கலாமைத் தங்களின் முதல் விருப்ப வேட்பாளாராக அறிவித்தனர். காங்கிரசுக்கு மமதா பாணர்ஜி வைத்த செக் என்று ஊடகங்கள் அதனைக் குறிப்பிட்டன. இந்த ஆண்டே தேர்தல் நடைபெறலாம் என்றும் ஆருடம் கூறின.
பதிலுக்கு பிரணாப் முகர்ஜியை முன்னிறுத்தியிருக்கிறது சோனியா. சோனியாவின் விருப்ப வேட்பாளர் அல்ல அவர் என்றாலும், அப்துல் கலாமுக்கு மாற்றாக பிரணாப் அமைவார் என்பது சோனியாவின் நம்பிக்கை. அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பது நிஜமே, என்றாலும் முலாயம் சிங், பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவாக அடித்த அந்தர் பல்டி, மமதா தனக்குத் தானே செக் வைத்துக் கொண்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

பிஜேபி என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறது. இனி ஆட்டம் சூடு பிடிக்க வேண்டுமானால் மாயாவதியும் கம்யூனிஸ்டுகளும் பிரணாப் முகர்ஜிக்கு அளிக்கும் ஆதரவை வாபஸ் பெறவேண்டும். அப்போதுதான் பிஜேபியால் தெளிந்த நிலைப்பாட்டை எடுக்க இயலும்.  சங்மாவைப் பொறுத்தவரையில் அதிமுகவும் பிஜூ ஜனதாதளமும் ஆதரவு அளிக்கும் பட்சத்தில் வேட்பாளராக அவர் நிற்கப் போவது உறுதி.
அலங்காரப் பதவி என்று வருணிக்கப்பட்டாலும், தற்போது சிக்கலான சதுரங்க ஆட்டத்தில் சிக்கிக்கொண்டிருக்கிறது குடியரசுத் தலைவர் பதவி. இந்தப் பின்னணியில், ஒரு குடியரசுத் தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்று பார்க்கலாம்.

குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் ஓட்டுரிமை யாருக்கு இருக்கிறது? 
  1. மாநில சட்டசபை உறுப்பினர்கள்
  2. மக்களவை லோக்சபா உறுப்பினர்கள்
  3. மாநிலங்களவை ராஜ்யசபா உறுப்பினர்கள்.  
ஒரு எம்ல்ஏவின் ஓட்டு  மதிப்பு எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
ஒரு எம்எல்ஏவின் ஓட்டு என்பது அவரது மாநில மக்கள் தொகைக்கு ஏற்றவாறு எண்ணிக்கை அளவில் வேறுபடும். அதாவது தமிழ்நாட்டில் உள்ள ஒரு எம்எல்ஏ வின் ஓட்டின் மதிப்பும் மணிப்பூரில் உள்ள ஒரு எம்எல்ஏவின் ஓட்டின் மதிப்பும் வேறு.
(குறிப்பு: இந்திய அரசின் சட்டப் பிரிவு 52 -2 ன் கீழ் , 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டதால் , அதையே இங்கு கணக்கீட்டுக்காக எடுத்துள்ளேன்.)

எம் எல் ஏ வின் ஓட்டு மதிப்பு = மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை (1971 ஆம் ஆண்டின் கணக்கின்படி) / மாநிலத்தின் மொத்த சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை * 1000

உதாரணம் :
தமிழ்நாட்டில் ஒரு எம் எல் ஏ வின் ஓட்டு மதிப்பு = 4,11,99,168/234*1000=176.06 (1971 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு)
தமிழ்நாட்டில் ஒரு எம் எல் ஏ வின் ஓட்டு மதிப்பு = 7,21,38,958/234*1000=308 (2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு)
சிக்கிமில் ஒரு எம் எல் ஏ வின் ஓட்டு மதிப்பு = 2,09,843/32*1000 = 7 (1971 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு)
சிக்கிமில் ஒரு எம் எல் ஏ வின் ஓட்டு மதிப்பு = 6,07,688/32*1000=18 (2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு)

2011ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கின்படி, இந்தியாவைப் பொறுத்தவரையில் மொத்தமுள்ள 30 மாநிலங்களில், ஒரு எம் எல் ஏ வுக்கான அதிக ஓட்டுகளைப் பெற்றுள்ள மாநிலம், உத்தரப் பிரதேசம். மதிப்பு, 495. குறைந்த ஓட்டுகளை சிக்கிம் மாநிலம் பெற்றுள்ளது. மதிப்பு, 18. தமிழ்நாடு 308 எம் எல் ஏக்களைக் கொண்டுள்ளது.
இந்தியாவின் மொத்த மாநில சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 4120 ஆகும். எம் எல் ஏ க்களின் மொத்த ஓட்டுகளின் எண்ணிக்கை மதிப்பு  5,49,474 .(2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கின் படி).
எல்லா மாநிலங்களின் , எம் எல் ஏ வின் எண்ணிக்கை மதிப்பை அறிய     http://en.wikipedia.org/wiki/Electoral_College_(India)இங்கே செல்லவும்.

எம்.பிக்களின் ஓட்டு மதிப்பு எவ்வாறு கணக்கிடப்படுகிறது ?
மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் = லோக்சபா உறுப்பினர்கள் (543 ) + ராஜ்ய சபா உறுப்பினர்கள் (233 ) = 776.
ஒரு எம்.பியின் ஓட்டு மதிப்பு = மாநில சட்டசபை உறுப்பினர்களின் மொத்த ஓட்டு மதிப்பு / மொத்த எம் பிக்களின் எண்ணிக்கை (லோக்சபா + ராஜ்யசபா)
ஒரு எம் பியின் ஓட்டு மதிப்பு = 5,49,474/776=708
மொத்த எம் பிக்களின் ஓட்டு எண்ணிக்கையின் மதிப்பு = 776 * 708 = 5,49,408
ஆதலால், குடியரசுத் தலைவருக்கு விழும் மொத்த ஓட்டுகளின் எண்ணிக்கை = 50% (எம் எல் ஏ ) + 50 % (எம் பி )
அந்த அடிப்படையில் மொத்த ஓட்டுகளின் மதிப்பு = 5,49,474+5,49,408=10,98,882 .

குடியரசுத் தலைவராக தகுதி பெற வேண்டிய ஓட்டு மதிப்பு என்ன?
குடியரசுத் தலைவருக்கான வேட்பாளர் வெற்றி பெற தேவைப்படும் ஓட்டுகள் = (மொத்த ஓட்டுகளின் எண்ணிக்கை/2 )+1
அதாவது, 10,98,882/2+1= 5,49,441+1=5,49,442
குடியரசுத் தலைவர் எவ்வாறு தேர்நதெடுக்கப்படுகிறார்?
இரண்டே இரண்டு பேர் தேர்தல் களத்தில் இருக்கும் வரை எந்தப் பிரச்சினையும் இல்லை. ஏனெனில், முதல் விருப்ப வேட்பாளர் 50 % க்கும் அதிகமான ஓட்டுகளை பெற்றிருப்பார். அவர் வெற்றி பெற்றவர் என எளிதாக அறிவித்து விடலாம். ஆனால், நான்கு பேர் நிற்கும் பட்சத்தில் எவ்வாறு தேர்ந்தடுக்கப்படுவார்? கீழே கொடுக்கப்பட்ட பெயர்கள் தங்களின் கற்பனைக்கு மட்டுமே.

உதாரணமாக ,
அப்துல் கலாம், பி ஏ சங்மா, பிரணாப் முகர்ஜி, ராம்ஜெத்மலானி என நான்கு பேர் நிற்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.  விழுந்த மொத்த ஓட்டுகளின் எண்ணிக்கை 15௦௦௦ எனக் கணக்கில் கொள்வோம். ஒவ்வொரு வாக்காளரும் தனது விருப்ப அடிப்படையில் முதல், இரண்டு, மூன்று, நான்கு  என வேட்பாளரைத் தெரிவு செய்ய வேண்டும்.

தேர்தல் முடிவுகள் கீழ்க்கண்டவாறு இருக்கும் பட்சத்தில் வெற்றி எவ்வாறு தீர்மானிக்கப் படுகிறது?
அப்துல்கலாம் = 5,250
பிரணாப் முகர்ஜி=4,800
ராம்ஜெத்மலானி = 2,700
பி ஏ சங்மா =2,250
7501 ஓட்டுகள் வாங்கியவர் தான் வெற்றி பெற்றவர் என அறிவிக்கப்பட வேண்டும். முடிவுகள் மேற்கூறிய நால்வருக்கும் வராத பட்சத்தில்,  நான்காம் இடத்தில் இருப்பவர் போட்டியிலிருந்து விலக்கப்பட்டு, அவருக்கு விழுந்த இரண்டாம் விருப்ப  ஓட்டுகள் மற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். அதாவது, அவருடைய ஓட்டு சீட்டில், இரண்டாம் விருப்ப ஓட்டுகள் யாருக்கு என்பதைப் பொறுத்து அந்த ஓட்டுகள் பகிர்ந்தளிக்கப்படும்.
இந்த நிலையில் பி ஏ சங்மா போட்டியிலிருந்து விலக்கப்பட்டு, அவருக்கு விழுந்த இரண்டாம் விருப்ப ஓட்டுகள் கீழ்க்கண்டவாறு இருக்கும் பட்சத்தில் அந்த ஓட்டுகள் அந்தந்த வேட்பாளருக்குப் போய்ச்சேரும்.

பி ஏ சங்மாவின் ஓட்டு சீட்டில் இரண்டாம் விருப்ப ஓட்டுகளாக பதிவானவை  :
அப்துல் கலாம் = 600
பிரணாப் முகர்ஜி=750
ராம் ஜெத்மலானி = 900
இப்போது வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்:
அப்துல்கலாம்= 5,250+600= 5,850
பிரணாப் முகர்ஜி= 4800+ 750 = 5,550
ராம் ஜெத்மலானி = 2,700+900=3,600
இந்நிலையிலும் எந்த வேட்பாளரும் வெற்றி பெறுவதற்கான 7501 ஓட்டுகளைப் பெறாத காரணத்தினால் , மூன்றாம் நிலையில் உள்ளவர் போட்டியில் இருந்து விலக்கப்படுவார் . மூன்றாவது முறையும் வாக்குகள் எண்ணப்பட்டு, மூன்றாம்  நிலையில் உள்ளவரின் மூன்றாம்  விருப்ப ஓட்டுகள் பகிர்ந்தளிக்கப் படும்.

ராம் ஜெத்மலானி ஓட்டு சீட்டில்  மூன்றாம் விருப்ப ஓட்டுகளாக பதிவானவை  :
அப்துல்கலாம் = 1,450
பிரணாப் முகர்ஜி = 2 ,150
இந்த ஓட்டுகள் பகிர்ந்தளிக்கப் படும் பட்சத்தில் அப்துல் கலாம், பிரணாப் முகர்ஜி பெற்ற வாக்குகள்:
அப்துல் கலாம் = 5,850+1,450=7,300
பிரணாப் முகர்ஜி = 5,550 + 2,150= 7,700

இறுதி சுற்றில் பிரணாப் முகர்ஜி 7 ,501 ஓட்டுகளை விட அதிகமாக பெற்று விட்டதால் அவரே இந்தியாவின் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். ஆட்டத்தின் போக்கு எந்த சுற்றில் வேண்டுமானாலும் மாறலாம். ஆகையால் அதிக வேட்பாளர்கள் நிற்கிற பட்சத்தில் யார் வெற்றி பெறுவார் என்பது மிகச் சிறந்த சதுரங்க ஆட்டமாகவே இருக்கும்.
இன்னும் சில தினங்களில் வேட்பாளர்கள் எத்தனை பேர் , எதிர் கட்சிகள் சார்பில் எத்தனை பேர் நிற்கப் போகிறார்கள், ஆளுங்கட்சி சார்பில் எத்தனை பேர் நிற்கப் போகிறார்கள் என்பதைப் பொறுத்துதான் இந்த ஆட்டம் சூடு பிடிக்கும்.  தற்போதைய நிலையில் வைத்துப் பார்க்கும் போது, இந்தியாவின் வர்த்தகத் துறை அமைச்சராக இருமுறையும், வெளியுறவு அமைச்சராக ஏற்கெனவே ஒரு முறையும் பணியாற்றிய தற்போதைய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜிதான் இந்தியாவின் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தோன்றுகிறது. இது என் தனிப்பட்ட முடிவு. என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.


No comments:

Post a Comment