Friday, July 29, 2011

பாலஸ்தீன எல்லையில் குடியேற்றங்கள் : இஸ்ரேல் மீது இந்தியா புகார்

 
நியூயார்க்: "பாலஸ்தீன எல்லைப் பகுதியில் குடியேற்றங்களை உருவாக்குவதை முதலில் இஸ்ரேல் நிறுத்த வேண்டும். அதுதான் இருதரப்புக்கிடையில் பேச்சுவார்த்தை துவங்க முதற்கட்ட தீர்வாக இருக்க முடியும்' என, ஐ.நா., சபையில் இந்தியா தெரிவித்துள்ளது.பாலஸ்தீன எல்லைப் பகுதிகளில், இஸ்ரேலியர்கள் உள்நுழைந்து குடியேற்றங்களை பல ஆண்டுகளாக உருவாக்கி வருகின்றனர். இருதரப்பு பேச்சுவார்த்தை துவங்கப்பட வேண்டுமானால், குடியேற்றங்களை நிறுத்த வேண்டும் என, பாலஸ்தீனம் கோரி வருகிறது. குறைந்தது 10 மாதங்களாவது இந்த நடவடிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும் என, கடந்தாண்டு செப்டம்பரில் கூறியது. ஆனால், இஸ்ரேல் அதை ஏற்க மறுத்தது. இதனால், அமைதிப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள பாலஸ்தீனம் மறுத்து விட்டது.இந்நிலையில், ஐ.நா.,வில் நடந்த மாதாந்திர இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்னை கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசிய, ஐ.நா.,வுக்கான இந்தியத் தூதர் ஹர்தீப் சிங் புரி, ""குடியேற்ற நடவடிக்கைகளை முதலில் இஸ்ரேல் நிறுத்த வேண்டும். இதில், சர்வதேச சமூகத்தின் கருத்தை இந்தியா ஏற்றுக் கொள்கிறது. குடியேற்ற நிறுத்தம் தான் அமைதிப் பேச்சுவார்த்தையின் துவக்கமாக இருக்க முடியும்,'' என்றார்.
Source : http://www.dinamalar.com/News_Detail.asp?Id=283541
 

No comments:

Post a Comment