Saturday, May 21, 2011

தலைமைச் செயலகம். புதியதா ? பழையதா ?

எல்லார் மனதிலும் உள்ள கேள்வி இது.  வாசகர்களில் பலர், இந்தக் கட்டிடம் மக்கள் வரிப்பணத்தில் கட்டப் பட்டதால், ஈகோ பார்க்காமல், புதிய கட்டிடத்தில் ஜெயலலிதா பணியாற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.   ஒரு வாசகர் இன்னும் ஒரு படி மேலே போய், சிறந்த நகைச்சுவை உணர்வோடு, இந்தக் கட்டிடத்தை கருணாநிதி குடும்பத்திடம் ஒப்படைத்து விட்டு, 1000 கோடி ரூபாயை திரும்ப வாங்கிக் கொள்ளலாம் என்று கூறியிருந்தார்.   இந்தக் கட்டிடம் அல்ல, புனித ஜார்ஜ் கோட்டைக்கு ஒரு விலை சொன்னீர்கள் என்றால் கூட, அதையும் வாங்கிக் கொள்ளும் அளவுக்கு கருணாநிதி குடும்பத்தினரிடம் பணம் இருக்கிறது என்பதே உண்மை. நினைத்த நாளில் குழந்தை ஆசைப்படுவது போல புதிய கட்டிடத்தை திறக்க வேண்டும் என்று, 2 கோடி ரூபாய்க்கு தோட்டா தரணியை வைத்து செட் போட்டு, திறப்பு விழா நடத்தினாரே கருணாநிதி….. மன்னிக்கவே முடியாது.
 20110115_secretriatechenna-copy
இந்த புதிய தலைமைச் செயலக கட்டிடம், கருணாநிதியின் திட்டம் மட்டும் அன்று.   2001 ஆட்சிக் காலத்தில், ஜெயலலிதா, புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டும் என்று, ராணி மேரிக் கல்லூரியை இடித்து விட்டு, அங்கே கட்ட முயன்றதும், சுற்றுச் சூழல் அமைச்சராக மத்தியில் இருந்த திமுக அமைச்சர் டி.ஆர்.பாலு, அதற்கு தடையில்லா சான்று வழங்காததாலும், கல்லூரி மாணவிகள் பெருமளவில் திரண்டு போராட்டம் நடத்தியதாலும், அந்தத் திட்டம் நிறைவேறாமல் போனது. ராணுவத்திற்கு சொந்தமான தற்போதைய தலைமைச் செயலக கட்டிடத்தை ராணுவம் திருப்பிக் கேட்டதால், அப்போது புதிய தலைமைச் செயலக கட்டிடம் கட்டுவதற்கான தேவை ஏற்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

அதற்குப் பிறகு, அந்த இடத்தை ராணுவம் கேட்டது போலத் தெரியவில்லை. அதனால்தானே செம்மொழி ஆய்வு நிறுவனத்துக்கு அந்தக் கட்டிடத்தை கருணாநிதி வழங்கினார் ?

சரி.   1000 கோடி ரூபாய் மக்கள் பணத்தை செலவழித்தாகி விட்டது.   சட்டசபையையும், தலைமைச் செயலகத்தையும், புதிய கட்டிடத்திற்கு மாற்றலாமா வேண்டாமா ?

ஏற்கனவே செயல்பட்டு வந்த புனித ஜார்ஜ் கோட்டையானது, பழம் பெருமை வாய்ந்தது. 17ம் நூற்றாண்டுக் கட்டிடம் அது.   சென்னை நகரின் பாரம்பரியத்தையும் பெருமையையும் உணர்த்துவது. மற்ற மாநிலங்களில் புதிய கட்டிடத்தில் சட்ட சபையும், தலைமைச் செயலகமும் செயல்படுவதற்கான காரணம், இது போன்றதொரு அழகான கட்டிடம் இல்லாததுதானே ?   அப்படிப் பட்ட சிறப்பான கட்டிடம் இருக்கும் போது புதிய கட்டிடம் எதற்கு ? கனியிருப்பக் காய் கவரலாமா ?


fort_st.george1
சரி புதிய தலைமைச் செயலக கட்டிடத்தை என்ன செய்யலாம் ? சென்னை நகரிலும், புறநகரிலும், நூற்றுக் கணக்கான அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. அவற்றுள் பல வாடகை கட்டடிங்களில் இயங்கி வருகின்றன. உதாரணத்திற்கு, நீதிபதிகளுக்காக கட்டப் பட்ட குடியிருப்பில் தான், லஞ்ச ஒழிப்புத் துறை இயங்கி வருகிறது.   இது போல, பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் துறைத் தலைமை அலுவலகங்களை ஒருங்கிணைத்து, துறைத் தலைமை அலுவலகங்களுக்கான கட்டிடமாக புதிய தலைமைச் செயலக கட்டிடத்தை மாற்றலாம்.   தற்போது அரசு கட்டிடங்களில் செயல்பட்டு வரும் துறைத் தலைமை அலுவலகங்களால் காலியாகும் இடங்களில், கீழ் நிலை அரசு அலுவலகங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

பொதுவாக ஒரு அரசு அலுவலகத்திலிருந்து மற்றொரு அரசு அலுவலகத்துக்கு ஒரு விபரம் வேண்டி கடிதம் எழுதினால், ஒரு வருடத்திற்கு, I invite your kind attention to the reference cited என்று மாவரைத்துக் கொண்டிருப்பார்கள். துறைத் தலைமை அலுவலகங்கள் ஒரே வளாகத்தில் இருந்தால், சம்பந்தப் பட்ட துறையின் அலுவலகர்கள், நேராக அந்த அலுவலகத்துக்கே சென்று, விளக்கங்கள் பெற்று, தேவையின்றி ஏற்படும் கால விரயத்தை தவிர்க்கலாம்.   மேலும், இது போன்ற ஒருங்கிணைந்த அரசு அலுவலகங்கள் இருப்பதால், ஒரு வகையான வெளிப்படைத் தன்மை ஏற்படும்.
 44310572
ரகசியமாக அலுவலகத்தில் சந்தித்து, ‘டீல்’ பேசுவது போன்ற காரியங்களை தவிர்க்கலாம்.

இதையெல்லாம் விட, பல்வேறு காரணங்களுக்காக அரசு அலுவலகங்களை அணுகும் பொது மக்கள் இங்கும் அங்கும் அலையாமல், ஒரே இடத்தில் அனைத்து அலுவலகங்களில் உள்ள வேலையையும் முடிக்கும் வாய்ப்பு இருக்கிறது.

ஆலோசனை நன்றாக இருக்கிறதா அன்பு வாசகர்களே ?

சவுக்கு

No comments:

Post a Comment