Friday, May 20, 2011

சுவாமியின் அடுத்த அதிரடி

கடந்த மாதம் டெல்லியில், சி.பி.ஐ-யின் புதிய அலுவலகத்தை பிரதமர் மன்மோகன்சிங் திறந்துவைத்தார். 11 தளங்களைக்கொண்ட அந்தப் புதிய கட்டடத்தின், 6-வது தளத்தில் சி.பி.ஐ-யின் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு இருக்கிறது. சி.பி.ஐ. தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து அது கையாண்ட முக்கியமான 14 வழக்குகளின் விசாரணை விவரங்கள் இந்த அருங்காட்சியகத்தில் இடம் பெற்று உள்ளன. 
1968-ல் நடந்த பண்டிட் தீனதயாள் உபாத்யாயா கொலை வழக்கில் தொடங்கி, 2009-ல் நடந்த சத்யம் நிறுவன வழக்கு வரை அடக்கம். ஆனால், நாட்டையே உலுக்கிய - ஏறத்தாழ 20 ஆண்டுகள் சி.பி.ஐ. விசாரித்த போஃபர்ஸ் பீரங்கி ஊழல் வழக்கு விசாரணை தொடர்பான விஷயங்கள் இதில் இடம்பெறவில்லை. ஊடகங்கள் இதைச் சுட்டிக்காட்டிக் கேள்வி கேட்டபோது, தங்களுக்கும் போஃபர்ஸுக்கும் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாததுபோல காட்டிக்கொண்டனர் காங்கிரஸார்.
காங்கிரஸ் இப்போதைக்கு, ஊழலுக்கு எதிரான முகத்தையே வெளிக்காட்ட விரும்புகிறது. காமன் வெல்த் ஊழல், அலைக்கற்றை ஊழல்​கள் தொடர்பான விசாரணைகள், லோக்பால் மசோதாவுக்கான முஸ்தீபு​கள் மூலம், தன்னை அப்பழுக்கற்ற கட்சியாகக் காட்டிக்கொள்ள, காங்கிரஸ் விரும்புகிறது.
ஆனால், பிரதமர் மன்மோகன் சிங்கின் மேஜைக்குப் போயிருக்கும் ஒரு கடிதம், காங்கிரஸின் அடி மடியிலேயே கை வைக்கிறது. 206 பக்கங்களில், 43 ஆதாரக் குறிப்பு​களுடன் எழுதப்பட்டு இருக்கும் அந்தக் கடிதத்தின் சாராம்சம், 'சோனியா ஓர் ஊழல்வாதி - அவர் மீது வழக்குத் தொடர அனுமதி வேண்டும்!’ என்பதுதான்.
கடிதத்தை எழுதி இருப்பவர் சுப்பிர​மணியன் சுவாமி!
குழி தோண்டிப் புதைக்கப்பட்ட போஃபர்ஸ் ஊழல் வழக்கில் இருந்து தற்போதைய ஹவாலா ஹசன் அலி மோசடி வழக்கு வரை பல்வேறு ஊழல், மோசடிகளில் சோனியாவுக்குப் பங்கு உண்டு என்று அடித்துச் சொல்கிறது, இந்தக் கடிதம்!
இந்தக் கடிதத்தில் உள்ள பல கேள்விகள் ஸ்வீடனின் தேசியப் புலனாய்வு அமைப்பின் தலைமை விசா​ரணை அதிகாரியாகவும் ஃபோபர்ஸ் விவகாரத்தில் ஸ்வீடன் நாட்டின் அரசுத் தலைமை வழக்கறிஞராகவும் பணியாற்றிய ஸ்டென் லிண்ட்ஸ்ட்ராம் நடத்திய விசாரணையின் அடிப்படை​யில் அமைந்துள்ளது.
அந்த விசாரணையில் எழுப்பப்பட்ட கேள்விகள் இவை...
போஃபர்ஸ் பீரங்கி பேரத்​துக்குப் பிறகு ஆட்டோவியோ குவாத்​ரோச்சியின் நிறுவனங்களுக்கு எப்படிப் பெரும் தொகை கிடைத்தது?
  சோனியா காந்தி குடும்பத்தாருக்கும் குவாத்ரோச்சிக்கும் உள்ள உறவு என்ன?
குவாத்ரோச்சியையும் அவருடைய ஏ.இ. சர்வீசஸ் நிறுவனத்தையும் போஃபர்ஸ் பீரங்கி நிறுவனத்துக்கு அறிமுகப்படுத்தியது யார்?
கமிஷன் வாங்கியது குவாத்ரோச்சி​தான் என்பது தெரிந்த பின்னரும், அவரால் இந்தியாவில் வழக்கைச் சந்திக்​காமல் எப்படித் தப்பிக்க முடிந்தது?
தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதால் முடக்கி​வைக்கப்பட்ட அவருடைய வங்கிக் கணக்கு, எப்படி மீண்டும் செயல்பாட்டுக்கு வந்து, அவரால் பணத்தை எடுத்துக்கொள்ள முடிந்தது?
அதன் பின்னணியில் இருந்தது யார்?
அந்தக் கடிதத்தில் சொல்லப்பட்டு இருக்கும் இன்னொரு முக்கியமான குற்றச்சாட்டு, வெளிநாட்டு வங்கிகளில் சோனியா காந்தியின் குடும்பத்தார் பணத்தைக் குவித்துவைத்து இருக்கிறார்கள் என்பது! வெளிநாட்டு வங்கிகளில் இருக்கும் பணம், ரஷ்ய உளவு நிறுவனமான கே.ஜி.பி-யிடம் இருந்து பனிப் போர் காலத்தில் பெறப்பட்ட பணமாக இருக்கலாம் அல்லது பல்வேறு ஊழல்கள் மூலமாகச் சேர்த்த பணமாக இருக்கலாம் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இந்தக் கடிதத்தின் மீது முடிவு எடுக்க பிரதமருக்கு மூன்று மாதங்கள் அவகாசம் தந்து இருக்கிறார் சுப்பிரமணியன் சுவாமி. பிரதமர் முடிவெடுக்காத பட்சத்தில், இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு அனுப்பத் திட்டமாம்.
''வலுவான ஆதாரங்களுடன் சொல்லப்பட்டு இருக்கும் இந்தக் குற்றச்சாட்டுகளை பிரதமர் நிராகரித்தால், சோனியா மீது வழக்குத் தொடர, உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கப் பிரகாசமான வாய்ப்புகள் இருக்கின்றன. வழக்கமான உத்தியைப் பயன்படுத்தி, கடிதத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிடவும் முடியாது. ஏற்கெனவே, அலைக்கற்றை ஊழல் தொடர்பாக ஆ.ராசா மீதான குற்றச்சாட்டுகளை அப்படிப் போட்டுத்தான், கடுமையான விமர்சனங்களைச் சந்தித்தார் பிரதமர்!'' என்கிறார் சுவாமி.
இந்தக் கடித ஏவுகணையை எப்படிச் சமாளிப்பது என்று குழப்பத்தில்  இருக்கிறார் பிரதமர். இது தொடர்பாக, கபில் சிபலிடம் பிரதமரும் சோனியாவும் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது. பிரதமர் நிராகரித்து, உச்ச நீதிமன்றம் வழக்கை அனுமதித்தாலும், சி.பி.ஐ. தங்கள் வசம் இருப்பதால், சமாளித்துக்கொள்ளலாம் என்று அந்தக் கூட்டத்தில் பேசப்பட்டதாகத் தெரிகிறது.
மன்மோகன் சிங், ஒரு கட்சிக்காரராக இந்தக் கடிதத்தை நிராகரிப்பாரா... அல்லது குற்றம் சாட்டப்பட்டவர் மீது நடவடிக்கை எடுத்து தன்னுடைய இமேஜைக் காப்பாற்றிக்கொள்வாரா?

No comments:

Post a Comment