Saturday, May 28, 2011

இன்று முதல் சென்னையில் ஹெல்மெட் அணிவது கட்டாயம்


சென்னை: இன்று முதல் சென்னையில் இருச்சர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது.

சென்னையில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது கடந்த திமுக ஆட்சியிலேயே கட்டாயமாக்கப்பட்டது. வாகன ஓட்டி தவிர, பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று அப்போதைய தமிழக அரசு அதிரடி உத்தரவுபோட்டது.

இந்த உத்தரவு வாகன ஓட்டிகளிடையே கடும் அதிருப்தியையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தியது. நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுத்ததையடுத்து, கட்டாய ஹெல்மெட் உத்தரவிலிருந்து அரசு பின்வாங்கியது. மேலும், ஹெல்மெட் அணிவது கட்டாயமில்லை என்றும் அறிவித்தது.

இந்த நிலையில், புதிதாக பதவியேற்றுள்ள அதிமுக அரசு சென்னையில் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்," சென்னையில் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாமல் வருபவர்களை கண்காணிக்க சிறப்பு போலீஸ் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

உத்தரவை மீறி ஹெல்மெட் அணியாமல் வந்தால் அபராதம் விதிக்கப்படும். மேலும், வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் எழுத்துக்கள் மற்றும் எண்கள் தெளிவாக எழுதப்பட்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்," என்று கூறினார்.

சென்னையில் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், ஹெல்மெட் விற்பனை கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஹெல்மெட்டுகள் கூடுதல் விலை வைத்து விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
Thatstaml

No comments:

Post a Comment