Sunday, May 22, 2011

தமிழகத் தேர்தல் முடிவுகள்: ஒரு பார்வை!

கான் பாகவி

2011 - ஏப்ரல் 13 அன்று நடந்த தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் மொத்தம் 17 முஸ்லிம் வேட்பாளர்கள் களத்தில் நின்றனர். தி.மு.க. கூட்டணியில் 10 முஸ்லிம்களும் அ.தி.மு.க. கூட்டணியில் 7 முஸ்லிம்களும் போட்டியிட்டனர்.
இவர்களில் அதிமுக கூட்டணி யில் 5 முஸ்லிம் வேட்பாளர்களும் திமுகவைச் சேர்ந்த டி.பி.எம். மைதீன் கானும் வெற்றிபெற்றுள் ளார்கள். அதிமுக கூட்டணியில் 2 பேரும் தி.மு.க. கூட்டணியில் 9 பேரும் தோல்வி அடைந்துள்ளனர்.

இந்தப் பொதுத் தேர்தலில் தி.மு.க. அரசுமீது மக்களுக்கிருந்த கடுமையான கோபம் வெளிப் பட்டுள்ளதைத் தெளிவாகக் காணமுடிகிறது. இந்தக் கோபம் சாதி, மத வேறு பாடின்றி எல்லாத் தரப்பு வாக்காளர்களிடமும் கனன்றுகொண்டிருந்தது இப்போது தெளிவாகியுள்ளது.

அரசியலில் கொள்ளையடிப் பதற்கும் ஓர் அளவில்லையா? அதிகார மமதைக்கும் ஓர் எல்லை வேண்டாமா? இந்த இரண்டுக் கும் இஸ்லாத்தில் அறவே இடமில்லை என்பது வேறு விஷயம். அதிகாரத்தைக் கையில் வைத்துக்கொண்டு ஒரு துறை விடாமல் எல்லாத் துறைகளிலும் தாங்கள் மட்டுமே கொடிகட்டிப் பறக்க வேண்டும்; அல்லது தங்களுக்குக் கப்பம் கட்டுவோர் மட்டுமே அத்துறையில் அடி எடுத்து வைக்க வேண்டும் என்றால், ஒரு ஜனநாயக நாட்டில் இதை எப்படி மக்கள் பொறுத்துக் கொள்வார்கள்?

ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தவர் கள் கோடிக்கணக்கில் ஊழல் செய்தார்கள் என்றால், அதிகாரி களும் அரசு ஊழியர்களும் தங்கள் பதவிக்கேற்ப ஆயிரக் கணக்கிலும் லட்சக்கணக்கிலும் ஊழல் செய்தார்கள்; கையூட்டு பெற்றார்கள். அரசு அலுவலகங் களில் ஒரு சின்ன காரியம் ஆக வேண்டுமென்றால் கூட, அரசு அதிகாரிகள் அதைத் தமது கடமையாகக் கருதாமல் நாணமே இன்றி வெளிப்படையாகப் பணம் கேட்கும் கொடுமையை எப்படி மன்னிப்பது? அதிலும் ஐந்துக்கும் பத்துக்கும் அல்லாடும் ஏழை, எளிய மக்களைக்கூட, விட்டுவைக்காமல், குடும்ப அட்டைக்கும் கருணைத் தொகை பெறுவதற்கும் இலஞ்சம் கேட்கும் ஈவிரக்கமற்ற அநாகரிகத்தை என்னவென்பது?

அந்த ஆளும் கட்சி, சிறுபான்மை மக்களுக்குச் சில சலுகைகளை&-சலுகைகூட அல்ல; உரிமையை- வழங்குகிறது; அல்லது வழங்குவதாகத் தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கிறது என்பதற்காக அதற்கு ஆதரவு தெரிவிப்பது மனித நேயமற்ற முடிவல்லவா? ஊரெல்லாம் பற்றி எரியும்போது -அதில் தானும் எரிய வேண்டியது வரலாம் என்பதைக் கூடச் சிந்திக்காமல்- தீயைப் பற்றவைத்தவன் எனக்கு ஒரு சலுகை செய்கிறான் என்ற ஒரே காரணத்திற்காக கைகொடுத்துக் காப்பாற்றுவது சக மனிதர்களுக்குச் செய்யும் துரோகம் அல்லவா?

நடந்துகொண்டிருந்தது ரௌடி கள் ராஜ்யம்! எங்கும் எதிலும் ஆளும் கட்சி குண்டர்களின் குறுக்கீடு! தட்டிக்கேட்டால் அடி, உதை! எதிர்த்து எழுதினால் எழுதிய கை ஒடிக்கப்படும்! நாடெங்கும் சிதறி வாழும், தலைமையின் குடும்ப உறுப்பினர்கள் இளவர சர்களாகப் பவணி வந்த கொடுமை! மத்தியை ஒருவருக்கும் மாநிலத்தை இருவருக்கும் பங்குவைத்துக் கொடுத்துவிட்டு, அவர்கள் கொள்ளையடித்து மாட்டிக்கொள்ளும்போது கட்சியின் அடிமட்டத் தொண்டன் முதல் நாட்டு மக்கள்வரை அனைவரும் ஒப்பாரிவைத்து அழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பு!

இதுவென்ன மக்களாட்சியா? அல்லது மன்னராட்சியா? ஐந்தாண்டு காலம் அனுபவித்த கொடுமைகளைத் தாங்க முடியாமல் திணறிய தமிழக வாக்காளர்கள் எப்போதுடா நேரம் வரும் என்று காத்துக்கொண்டிருந்ததைப் போன்று, அந்தக் குடும்ப ஆட்சியை மட்டுமன்றி அதற்குத் துணைபோன எல்லாரையும் தண்டித்துவிட்டார்கள். நல்ல வேளை! இப்படியொரு வாய்ப்பு மட்டும் இல்லாமல் போயிருந்தால் நாடு காடாகப் போயிருக்கும்!

இந்நிலையில்தான், புதிதாகப் பிறந்த மனிதநேய மக்கள் கட்சி தொலைநோக்கோடு ஒரு முடிவெடுத்தது. தமிழக முஸ்லிம்கள் மட்டுமன்றி, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களின் எண்ணவோட்டத்தைப் படம் பிடித்துப் பார்த்து அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தது. இதை, சிறுபான்மை மக்களுக்குச் செய்யும் துரோகம் என்றனர் சிலர். பதவிப் பித்து தலைக்கேறிவிட்டது என்று வசைபாடினர் சிலர். பொடியன் கள்; விவரம் தெரியாமல் அழிவை விலைக்கு வாங்கிவிட்டனர் என்றனர் சிலர்.

ஆனால், ம.ம.க. எடுத்த முடிவு எவ்வளவு சரியானது என்பதை மக்கள் அளித்த தீர்ப்பு உறுதிப்படுத்திவிட்டது. இத்தீர்ப்பில் தமிழக முஸ்லிம் சமுதாயத்திற்குப் பங்கில்லை என்று சொல்வீர்களா? முஸ்லிம்களின் ஆதரவின்றி அ.தி.மு.க. கூட்டணி இவ்வளவு பெரிய வெற்றியை ஈட்டியிருக்க முடியுமா? முஸ்லிம்கள் திரளாக வசிக்கும் தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறதே! அது எப்படி சாத்தியமாயிற்று? தலைவர்கள், சமுதாய மக்களின் மனநிலையை நாடிபிடித்துப் பார்த்து முடிவெடுக்க வேண்டுமே தவிர, தங்களின் தனிப்பட்ட சுயநலத்திற்காக முடிவெடுக் கலாகாது.

ம.ம.க.வைப் பொறுத்தவரையில், மூன்று தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டு தொகுதி களில் வெற்றிக் கனியைப் பறித்துள் ளது. அதுவும் தனிச் சின்னத்தில் என்பதுதான் அரசியல் அரங்கில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம். இரவல் சின்னத்தில் நின்று, தனி அடையாளத்தைத் தொலைத் துவிட்டு நூறு தொகுதிகளில் வெல்வதைக் காட்டிலும், ஒரேயோர் இடத்தில் தனிச் சின்னத்தில் நின்று வெல்வதேமேல். அதற்கு தைரியம் வேண்டும்.

தனிச் சின்னம் என்பது, ஊடகங்களின் புருவத்தை உயர்த்தக் கூடியது; தேர்தல் ஆணையத்தின் பதிவைப் பெறக்கூடியது; மக்கள் மனத்தில் இடம் பிடிக்கக்கூடியது. எல்லாவற்றுக்கும் மேலாக, சட்டப் பேரவை, மக்களவை ஆகிய மன்றங்களில் சொந்தக் காலில் நின்று, சமுதாயத்திற்காகச் சுதந்திரமாகக் குரலெழுப்ப வாய்ப்பளிக்கக்கூடியது, அது நாளடைவில் சமுதாயத்தின் அடையாளமாக, சமுதாய வேட்பாளர்களின் கைத்தடியாக, வாக்காளர்களின் முழக்கமாக மாற வல்லது.

பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லாஹ் இராமநாதபுரம் தொகுதியில் 65,831 வாக்குகள் பெற்று அமோக வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் கே.எச். ஹசன் அலி 50,074 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். வித்தியாசம் 15,757 வாக்குகள்.

ஆம்பூர் தொகுதியில் நின்ற அஸ்லம் பாஷா பதிவான 1,70,067 வாக்குகளில் 60,361 வாக்குகள் பெற்று 5 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் விஜய் இளஞ்செழியனுக்கு 55,270 வாக்குகள் கிடைத்தன.

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் ம.ம.க. சார்பில் போட்டியிட்ட இளவல் தமீம் அன்சாரி 9,203 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந் தார். அவர் பெற்ற வாக்குகள் 54,988 ஆகும். ஜெ. அன்பழகன் (தி.மு.க.) 64,191 வாக்குகள் பெற்று வென்றார்.

இவர்கள் அனைவரும் இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் நின்றவர்கள். இது ஒரு புதிய சின்னம். தேர்தல் நெருக்கத்தில்தான் சின்னமே அறிவிக்கப்பட்டது. நகரங்கள் முதல் கிராமங்கள்வரை வாக்காளர்களிடம் சின்னத்தைக் கொண்டுபோய்ச் சேர்ப்பதே ஒரு சவாலான பணியாக இருந்தது. அதிலும் சேரிகள் நிறைந்த சேப்பாக் கம் தொகுதியில் சின்னத்தை அறிமுகப்படுத் துவதற்குள் தேர்தல் நாள் வந்துவிட் டது. தேர்தலின் நியாயமான செலவுக்கு நிதியோ வேண்டிய பொருட்களோ போதுமான அளவுக்கு இல்லாத பற்றாக்குறை.

இதற்கெல்லாம் மேலாக, முஸ்லிம் என்பதற்காக, ஓட்டுப்போடுவதா? என்று முஸ்லிம் வாக்காளர்களைக் குழப்பி, குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயன்றவர்கள் செய்த அட்டூழியம் ஒரு பக்கம்! இதையெல்லாம் மீறி, நின்ற மூன்று தொகுதிகளில் இரண்டில் ம.ம.க. வெற்றிக்கொடி நாட்டி, மற்றொன்றில் 54 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்றிருக் கிறது என்றால், இது சாதனை அல்லாமல் வேறென்ன?

என்னைப் பொறுத்தமட்டில், தமிமுன் அன்சாரி தோற்கவில்லை; வென்றிருக்கிறார் என்றே சொல்வேன். தலைநகர் மத்தி யில் ஒரு பெரிய தொகுதியில் ஆளும்கட்சியின் முக்கியப் பிரமுகரை எதிர்த்து ஆர்ப்பாட்ட மின்றி, ஆடம்பரமின்றி ஓர் இளைஞர் இவ்வளவு பெரிய வாக்குகள் பெற்றிருக்கிறார் என்றால், இதை கௌரவமான தோல்வி என்று வேண்டுமானால் சொல்லலாம்.

ஆக, சட்டப் பேரவையில் முதன்முதலாக ம.ம.க. அடியெடுத்து வைக்கிறது. தனிச் சின்னத்தோடும் சுயமரியாதையோடும் சமுதாயத் தின் குரலை ஒலிக்க, கடும் உழைப்புக்குப்பின் நுழை கிறது. வாழ்த்துவோம் அந்த நண்பர்களை! பிரார்த்திப்போம் அவர்களின் வளர்ச்சிக்கு! எந்த நேரத்திலும், படைத்தவனை மறக்காமல், பிறந்த சமுதாயத்தைக் கைவிடாமல், பொறுப்புகளில் வழுக்கிவிடாமல் நிதானம், நீதி, நேர்மை தவறாமல் சாதனை படைக்க வேண்டுவோம் அல்லாஹ்வை!

-www.tmmk.info

No comments:

Post a Comment