Tuesday, May 10, 2011

நாட்டின் பொருளாதார பிரச்னைகளுக்கு இஸ்லாமிய வங்கியே தீர்வு! இந்திய வல்லுனர்கள் நம்பிக்கை

உலகின் பெரும்பாலான நாடுகள் வட்டி உள்ளிட்ட பொருளாதார சீர்குலைவு திட்டங்களால் பின்னடைவை சந்தித்து வரும் நிலையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இஸ்லாமிய வங்கியியல் மட்டுமே தீர்வு என்ற நல்ல செய்தி கிடைத்திருக்கிறது.



பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பிரபல பொருளியல் வல்லுனர்களால் பொருளியல் தீர்வுக்கான சிறந்த மாற்று என ஒப்புக்கொள்ளப்பட்ட இஸ்லாமிய வங்கிமுறை (Islamic Banking)என்பது வட்டியில்லா வங்கி முறையாகும். கடன் வாங்குபவரையும், கொடுப்பவரையும் கடனாளி, கடன்காரர் என்ற நிலையிலிருந்து முதலீட்டாளர்களாக மாற்றி இருவரின் பொருளாதார தேவைகளிலும் வங்கி தலையிட்டுத் தீர்க்கும் வங்கியியல் முறை, பெரும்பாலான இஸ்லாமிய நாடுகளில் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக நடைமுறையில் உள்ளன.

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நடந்த இஸ்லாமிய வங்கியியல் குறித்த கருத்தரங்கில் பிரபல பொருளியல் வல்லுனர் இர்பான் ஷாகித் பேசும்போது, “நமது நாட்டின் விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்க்க இஸ்லாமிய வங்கியியல் முறையே சரியான தீர்வாகும்” என்றார்.

கடந்த 2001 செப்டம்பர்-11 தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்காவில் முதலீடு செய்துள்ள அரேபிய வணிகர்களின் நிதியாதாரங்கள், அல்காயிதாவுடன் தொடர்பு படுத்தப்பட்டு முடக்கப்பட்டதைத் தொடர்ந்து 600 பில்லியன் டாலர் மதிப்பிலான அவர்களின் முதலீடுகளை அமெரிக்கா தவிர்த்து ஏனைய ஐரோப்பிய நாடுகளில் முதலீடு செய்யத் தொடங்கினர்.

சேமிப்புகளுக்கும் முதலீடு களுக்கும் வட்டி வசூலிப்பதை இஸ்லாம் தடைசெய்திருப்பதால் தங்களது சேமிப்புகளும் முதலீடுகளும் பாதுகாப்பாக இருப்பதற்கு அராபிய ஷேக்குகள் இஸ்லாமிய வங்கிகளே பாதுகாப்பானது என்பதால் அரபு நாடுகள் மட்டுமின்றி உலகெங்கும் சுமார் 75 நாடுகளில் 500க்கும் அதிகமான கிளைகளைக் கொண்டுள்ள இஸ்லாமிய வங்கிகளில் முதலீடு செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

இஸ்லாமிய வங்கியியல் என்ற பெயரிருந் தாலும் அனைத்து மதத்தைச் சார்ந்தவர்களும் பயன்பெறத்தக்க வங்கியியல் முறையே இஸ்லாமிய வங்கி முறையாகும் என்பது இதன் கூடுதல் சிறப்பம்சம். மாற்று வங்கியியல் (Alternative Banking), ஷரியா பைனான்ஸ் (Sharia Finance) என்றெல்லாம் அறியப்படும் இஸ்லாமிய வங்கியல் முறையை உலகெங்கும் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் பின்பற்றி வருகின்றன. சர்வதேச வங்கிகளான Standard Chartered,HSBC ஆகியவை தங்களின் பழைய வங்கியியல் நடைமுறையுடன் (Convetional Banking) இஸ்லாமிய வங்கியியல் முறைக்கு கடந்த ஐந்தண்டுகளுக்கு முன்பே மாறத் தொடங்கி விட்டன.

உலகெங்குமுள்ள முதலீட்டாளர்களை ஈர்த்துள்ள இஸ்லாமிய வங்கியியல் முறையை இந்தியாவில் கேரள அரசு சமீபத்தில் நடைமுறைப் படுத்தியுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரும் ஜனதா கட்சி என்ற பெயரில் கட்சி நடத்தி வருபவருமான சுப்ரமணிய சுவாமி இதற்கு எதிராகத் தொடர்ந்திருந்த வழக்கிற்கு எதிராக உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து கேரளாவில் கடந்த பிப்ரவரிமுதல் இஸ்லாமிய வங்கியியல் முறைக்கான ஆயத்த ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளன.

கடந்த இருவருடங்களாக உலகெங்கும் நிலவும் பொருளாதார மந்தநிலையைத் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச வங்கிகள் பெரும் பின்னடைவைச் சந்தித்தபோதும், இஸ்லாமிய வங்கிகளின் வளர்ச்சி 200%அதிகரித்ததன் மூலம் தற்கால பொருளாதாரப் பிரச்சினைகளுக்கான சரியான மாற்றுத் தீர்வு இஸ்லாமிய வங்கியியல் முறையே என்ற கருத்து உலகெங்கும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இஸ்லாமிய வங்கியியல் உலகமெங்கும் வரவேற்பு பெற்று வரும் நிலையில் இந்தியாவும் வரவேற்கத் தயாராகிறது.

http://www.tmmk.info/

No comments:

Post a Comment