Thursday, June 23, 2011

3 மாதத்தில் அரசு கேபிள் டிவி: உள்ளாட்சித் தேர்தலுக்கு முன் தொடங்க ஜெ திட்டம்!!

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன், அதாவது 3 மாதங்களுக்குள் அரசு கேபிள் டி.வி. நிறுவனம் தொடங்கப்படும் என்று தெரிகிறது.

ஆட்சிக்கு வந்தால் அரசு கேபிள் டி.வி. திட்டம் அமல்படுத்தப்படும் என்று அதிமுக அறிவித்திருந்தது. இந் நிலையில் அந்தத் திட்டத்தை அமலாக்கும் நடவடிக்கைகளை முதல்வர் ஜெயலலிதா ஆரம்பித்துள்ளார்.

முதல்கட்டமாக சென்னையைத் தவிர்த்த தமிழகத்தின் பிற மாவட்டங்களைச் சேர்ந்த கேபிள் டி.வி. ஆபரேட்டர்களை ஜெயலலிதா நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அப்போது தங்களது பிழைப்பு பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ளுமாறு முதல்வரிடம் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

மேலும் சேனல்களை டிஜிட்டல்மயமாக்க வேண்டும், சென்னை நகரில் இருப்பது போல அனைத்து மாவட்டங்களிலும் சேனல்களை இலவசமாக வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளையும் அவர்கள் முன் வைத்தனர்.

அம்மா உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாகவே அரசு கேபிள் டி.வியைத் தொடங்கினால் அதிமுகவுக்கு ஆதரவாக வாக்குகள் கிடைக்கும் என்று சில கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஐடியா தர, அதற்கும் முன்பாகவே இந்தத் திட்டம் தொடங்கப்படும் என்று முதல்வர் கூறியதாகத் தெரிகிறது.

இப்போது தஞ்சாவூர், கோவை, வேலூர், நெல்லை ஆகிய இடங்களில் அரசு கேபிள் டி.வியை செயல்படுத்துவதற்கான கட்டுப்பாட்டு அறைகள் உள்ளன. திமுக ஆட்சியில் சன் டிவியுடன் ஏற்பட்ட மோதலால் ஆரம்பிக்க திட்டமிடப்பட்ட அரசு கேபிள் நிறுவனத்துக்காக ஆரம்பிக்கப்பட்ட கட்டுப்பாட்டு அறைகள் இவை.

ஆனால், சன் டிவி-திமுக சமாதானம் ஏற்பட்டதையடுத்து அந்தத் திட்டத்தை திமுக அரசு கிடப்பில் போட்டது. கோடிக்கணக்கில் செலவிட்டு வாங்கிய உபகரணங்களையும் கட்டுப்பாட்டு அறைகளையும் ஓரத்தில் போட்டு வைத்தனர்.

இப்போது இந்த கட்டுப்பாட்டு அறைகளை செயல்பட வைத்தாலே அரசு கேபிள் டி.வியை தொடங்குவதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் துவங்கிவிடும்.

Thatstamil

No comments:

Post a Comment