Tuesday, June 28, 2011

ஊனம் ஒரு குறையல்ல: பார்வையற்ற பேராசிரியர் அரசு கல்லூரி முதல்வராக நியமனம்



சென்னை, ஜுன் 21   சென்னையைச் சேர்ந்தவர் பேராசிரியர் டாக்டர் கே.எம். பிரபு. பார்வையற்றவரான இவர் ஊனம் ஒரு குறையல்ல என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குவதுடன் தமிழ்நாட்டில் முதல் முறையாக கல்லூரி முதல்வராகி சாதனை படைத்துள்ளார்.
 
டாக்டர் கே.எம். பிரபுவுக்கு பள்ளியில் படிக்கும் போது முதலில் லேசாக பார்வை குறைபாடு ஏற்பட்டது. என்றாலும் சமாளித்துக் கொண்டு பள்ளிப்படிப்பை தொடர்ந்தார். ஆனால் அதன் பிறகு முற்றிலும் பார்வை இழந்து விட்டார். இதனால் அவர் மனம் தளர்ந்து விட வில்லை. தொடர்ந்து பள்ளிப் படிப்பை முடித்தார். அதன் பிறகு கல்லூரியில் சேர்ந்து படித்தார்.
 
சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்தார். பின்னர் பி.எச்.டி. பட்டம் பெற்றார். அவருக்கு பேராசிரியர் வேலை கிடைத்தது.   சென்னை நந்தனத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பல ஆண்டுகள் பேராசிரியராக பணிபுரிந்தார்.
 
பின்னர், அரியானாவில் உள்ள பி.பி.எஸ். கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு மாணவர்களின் வசதிக்காக மொழி லேப்களை (ஆய்வகங்கள்) அமைத்தார். இது போன்று மொத்தம் 6 லேப்களை உருவாக்கினார். இந்த மொழி லேப்கள் மூலம், மாணவர்கள் 6 மாதங்களில் ஆங்கில மொழியை சரளமாக பேசும் அளவுக்கு திறனை வளர்த்துக் கொள்ள முடியும்.
 
தமிழ்நாட்டுக்கு திரும்பி வந்த பிரபு, சென்னை மாநிலக் கல்லூரியில் பேராசிரியராகவும், துறைத் தலைவர் பொறுப்பும் வகித்தார். தற்போது இவர் கல்லூரி முதல்வராக பதவி உயர்வு பெற்றார். திருப்பூரில் உள்ள சிக்கன்னா அரசு கலைக் கல்லூரியில் முதல்வராக பணி நியமணம் செய்யப்பட்டார். அக்கல்லூரியில் நேற்று முதல்வராக பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.
 
கண் பார்வை இழந்த ஒருவர் தமிழ்நாட்டில் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளது. இதுவே முதல் முறையாகும். இவர் நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மாணவர்களுக்கு பாடங்களை நடத்துகிறார். இதற்கு வசதியாக தனது செல்போனில் நவீன தொழில் நுட்டபங்களையும் பொருத்தி வைத்துள்ளார்.
 
3
ஜி இணைப்பையும் பெற்றுள்ளார். பாட சம்பந்தமான தகவல்கள் சேகரிப்பு உள்ளிட்ட விஷயங்களில், உடன் பணியாற்றும் பேராசிரியர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் இவருக்கு உதவி வருகின்றனர்.
 
இதுபற்றி, பேராசிரியர் பிரபு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
 
முதலில் சமூகத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு முறை செய்தி தாள்களை திறக்கும் போதும், அதில் லஞ்சம், ஊழல், வன்முறை, கொலை, சாவுகள் பற்றிய செய்திகளே அதிகமாக தெரிகின்றன. சமூகத்தில் அனைத்தும் தவறாகப் போய் விட்டதாகவே நாம் கருத வேண்டி இருக்கிறது. ஆனால் அந்த சமூதாயத்தில் ஒரு உதாரண குணத்தின் அடையாளமாக நான் திகழ்கிறேன்' என்றார் அவர்.

No comments:

Post a Comment