Thursday, June 30, 2011

பிரதமரை சந்தி்த்தார் தயாநிதி மாறன்: பதவியை ராஜினாமா செய்வாரா?

டெல்லி: மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் இன்று டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசினார். இன்னும் ஓரிரு நாட்களில் அமைச்சரவை மாற்றியமைக்கப்படவுள்ள நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. இருப்பினும் தனது துறை தொடர்பாக பிரதமரை சந்தித்துப் பேசியதாக தயாநிதி மாறன் கூறியுள்ளார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், ஏர்செல் நிறுவனத்திற்கு சாதகமாக நடந்து கொண்டதாக பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் தயாநிதி மாறன். மேலும் பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்புகளை அவர் தவறாக பயன்படுத்தியதாகவும் பழைய சர்ச்சை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இதைத் தொடர்ந்து தயாநிதி மாறன் பதவி விலக வேண்டும் இல்லாவிட்டால் அவரை பிரதமர் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. தயாநிதி மாறனும் இதுவரை தனது பதவியை ராஜினாமா செய்யவில்லை, பிரதமரும் அவர் பதவியை பறிக்கவில்லை.

இந்நிலையில் இன்று தயாநிதி மாறன் பிரதமர் மன்மோகன் சிங்கை டெல்லியில் சந்தித்து பேசினார். இன்னும் ஓரிரு நாட்களில் அமைச்சரவை மாற்றியமைக்கப்படவுள்ள நிலையில் நடந்துள்ள இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது. ஏற்கனவே அமைச்சரவை மாற்றியமைக்கப்படும்போது தயாநிதி மாறனின் பதவி பறிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் தயாநிதி மாறன் எதற்காக பிரதமரை சந்தி்த்தார், அவர்கள் என்ன பேசிக் கொண்டார்கள் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. பிரதமர் நீக்கும் முன் தானாக ராஜினாமா செய்வாரா மாறன் என்று எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.

அதேசமயம், தனது சந்திப்பில் எந்த அரசியல் முக்கியத்துவமும் இல்லை என்றும் துறை ரீதியான அலுவல் தொடர்பாகவே பிரதமரை சந்தித்துப் பேசியதாகவும் தயாநிதி மாறன் விளக்கியுள்ளார்.
 
 
Thatstamil

No comments:

Post a Comment