Thursday, June 16, 2011

எரிவாயு தோண்டி எடுப்பதில் ரிலையன்சுக்கு சலுகை-நாட்டுக்கு பெரும் நஷ்டம்

டெல்லி: இந்தியாவில் இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய்யை தோண்டி எடுப்பதில் 3 தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஏராளமான சலுகைகளைக் காட்டி வருவதாகவும் இதனால் நாட்டுக்கு பெருமளவில் இழப்பு ஏற்பட்டு வருவதாகவும் மத்திய தணி்க்கைத் துறை குற்றம் சாட்டியுள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ. 1.76 லட்சம் கோடி அளவுக்கு நாட்டுக்கு இழப்பு ஏற்பட்டதாக தணிக்கைத் துறை தாக்கல் செய்த அறிக்கையால் தான் அந்தப் பிரச்சனையே வெளியில் பெரிய அளவில் தெரியவந்தது. இதையடுத்து மத்திய அமைச்சர் ராசா உள்ளிட்ட பலர் சிக்கினர்.

இந் நிலையில் கச்சா எண்ணெய் மோசடியை தணிக்கைத்துறை அம்பலப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் பல பகுதிகளில் குறிப்பாக கடலுக்கடியில் ஏராளமான கச்சா எண்ணெய்யும் இயற்கை எரிவாயுவும் இருப்பு உள்ளது. ஆனால், இதைக் கண்டுபிடித்து தோண்டி எடுக்க வேண்டிய மத்திய அரசும், அதன் முக்கிய எண்ணெய் நிறுவனமான ஓ.என்.ஜி.சியும் நீண்டகாலமாக அமைதி காத்து வந்தன.

அதே நேரத்தில் இந்த கச்சா எண்ணெய், எரிவாயுவை தோண்டி எடு்க்க சில ஆண்டுகளுக்கு முன் தனியாருக்கு அனுமதி தரப்பட்டது.

இதையடுத்து முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் உள்ளிட்ட சில நிறுவனங்கள், ஆந்திர கடலோரம் உள்ளிட்ட பல பகுதிகளை குத்தகைக்கு எடுத்து எரிவாயு, எண்ணெய் தோண்டி எடுக்கும் பணிகளை ஆரம்பித்துள்ளன.

இதில் ரிலையன்ஸ் நிறுவனம் ஆந்திர அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் பல விதிகளை மீறியுள்ளது. இதை மத்திய அரசும் அனுமதித்துள்ளது. இதனால் நாட்டுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், எவ்வளவு இழப்பு என்பதை கணக்கிடுவது மிகவும் கடினம் என்றும் தணிக்கைத்துறை குற்றம் சாட்டியுள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனம் அவ்வப்போது தனது முதலீட்டுத் திட்ட அறிக்கையை மாற்றிக் கொண்டே வருவதாகவும், அதை மத்திய அரசும் அமைதியாக அனுமதித்து வருவதாகவும், இதனால் நாட்டுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருவதாகவும் தணிக்கைத்துறை அறிக்கை கூறியுள்ளது.

மேலும் ரிலையன்ஸ் தாக்கல் செய்யும் செலவுக் கணக்குகள் நம்ப முடியாத அளவுக்கு இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்தக் கணக்குகளைக் காட்டி அரசுக்கான வருவாயைக் குறைக்க அந்த நிறுவனம் முயல்வதாகத் தெரிகிறது.

போதிய போட்டி இல்லாததால் இந்த நிறுவனம் சொல்வதே கணக்கு என்றாகிவிட்டது, இதைக் கண்காணிக்க வேண்டிய டைரக்டர் ஜெனரல் ஆப் ஹைட்ரோகார்பன்ஸ் அமைப்பு அமைதி காத்து வருகிறது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment