Tuesday, March 15, 2011

ஜப்பானில் தொடரும் அணுஉலை வெடிப்பு - 3 வது வெடிப்பால் 20 கிமீ வேகத்தில் கதிர்வீச்சு பரவல்

சுமோ(ஜப்பான்),மார்ச்.13:ஜப்பானில் அணு நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் முக்கிய அணுசக்தி மையமான ஃபுகுஷிமாவின் மூன்றாவது அணுஉலையில் இன்று பிற்பகல் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக 19 பேர் படுகாயமடைந்தனர். இந்த வெடிப்பு காரணமாக மணிக்கு 20 மைல் வேகத்தில் அணுக்கதிர் வீச்சு பரவும் வாய்ப்பு உள்ளதாகவும், மக்கள் வேகமாக வெளியேற வேண்டும் என்றும் ஜப்பான் அரசு அறிவித்துள்ளது.

சமீபத்தில் நில நடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக ஜப்பானின் 11 அணு உலைகளும் பெரும் ஆபத்தில் சிக்கியுள்ளன. இவற்றால் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று சர்வதேச அணுசக்தி கழகம் அறிவித்துள்ள போதிலும், எந்த கட்டுப்பாடு முறைகளுக்கும் அடங்காமல், அணு உலைகளின் ஹைட்ரஜன் வெடித்துச் சிதற ஆரம்பித்துள்ளது.

ஃபுகுஷிமா டாய்ச்சி அணு சக்தி நிலையத்தில் 5 ரியாக்டர்கள் உள்ளன. இவை ஐந்துமே அபாயகரமானவையாக அறிவிக்கப்பட்டுவிட்டது.

இவற்றில் முதல் அணுஉலை கடந்த சனிக்கிழமை வெடித்தது. அதிலிருந்து பெரும் புகையுடன் ஹைட்ரஜன் மற்றும் அணு உலைக் கழிவுத்துகள் வெளியேறி வருகின்றன. இதில் மொத்தம் 160 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 60 பேர் முழுமையான கதிரிவீச்சுத் தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்.

இரண்டாவது அணு உலை இன்று காலை 5 மணிக்கு வெடித்தது. இதிலும் 50 பேர் வரை காயமடைந்துள்ளனர். இதன் காரணமாக அணுஉலைகளின் அருகாமைப் பிரதேசங்களில் வசித்தவர்களில் இதுவரை 6 லட்சத்துக்கும் அதிகமாக மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் பிற்பகலில் ஜப்பான் நாட்டு நேரப்படி 2.41-க்கு வெடித்துள்ளது. இதிலிருந்து மணிக்கு 20 கிமீ வேகத்தில் கதிர்வீச்சுப் பரவ ஆரம்பித்துள்ளதாகவும் அது இன்னும் வேகமாகப் பரவ வாய்ப்புள்ளதாகவும் ஜப்பான் அரசு அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளது.

அருகாமைப் பிரதேசங்களில் உள்ள மக்கள் முற்றாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அணுசக்தி நிலையத்திலிருந்து 20 கிமீக்கு அப்பால் வசிப்பவர்கள் வீடுகளைவிட்டு வெளியேற வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த அணுஉலைகளிலிருந்து முழுமையான கதிரியக்கம் வெளியாக ஆரம்பித்தால் ஏற்படும் அழிவின் அளவு ஹிரோஷிமா - நாகசாகியில் ஏற்பட்டதைவிட 1 லட்சம் மடங்கு அதிகமாக இருக்கும் என ரஷ்யாவில் மூடப்பட்ட செர்னோபில் அணுசக்தி நிலையத்தில் பணியாற்றிய ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

Tnks palaivantudu

No comments:

Post a Comment