Wednesday, March 23, 2011

தங்கபாலு மனைவி மயிலாப்பூரில் போட்டி-அறந்தாங்கியில் திருநாவுக்கரசர்


Jayanthi Thangabalu

 
டெல்லி: தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கொடுத்த வேட்பாளர் பட்டியலை நிராகரித்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தனது நேரடி மேற்பார்வையில் புதிய பட்டியலைத் தயாரித்து வெளியிட்டுள்ளார். இருப்பினும் தனது மனைவிக்கு கடுமையாக போராடி சீட் வாங்கி விட்டார் தங்கபாலு.

இந்தப் பட்டியலில் நடிகர் எஸ்.வி.சேகரின் பெயர் இடம் பெறவில்லை.
பாஜகவில் இருந்து, பின்னர் அதிமுகவுக்குத் தாவி, அதிலிருந்தும் நீக்கப்பட்டு, திமுகவுடன் ஒட்டிக் கொண்டிருந்து விட்டு திடீரென காங்கிரஸுக்கு வந்தவர் சேகர். மீண்டும் மயிலாப்பூரில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தார். முதல் ஆளாக விருப்ப மனுவையும் தாக்கல் செய்தார்.

இருப்பினும் காங்கிரஸ் வெளியிட்டுள்ள இந்த முதல் பட்டியலில் சேகரின் பெயர் இடம் பெறவில்லை. அவர் மயிலாப்பூரில் போட்டியிட மட்டுமே விருப்ப மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அது கிடைக்கவில்லை. ஒரு வேளை வேறு தொகுதியில் அவரை நிறுத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதா என்று தெரியவில்லை. அவருக்கு வர வேண்டிய சீட்டை, தங்கபாலு தனது மனைவி ஜெயந்திக்காக தட்டிக் கொண்டு போய் விட்டார்.

தமிழக காங்கிரஸ் கட்சியினர் எந்த வேகத்தில் திமுகவை நெருக்கி சீட் வாங்கினார்களோ அதை விட மோசமான முறையில், வேட்பாளர் தேர்வில் குழம்பித் தவித்துத் திண்டாடி விட்டனர்.

திமுகவை மிரட்டி, உருட்டி 63 சீட்களை வாங்கி விட்ட காங்கிரஸார் வேட்பாளர்களை அறிவிக்க முடியாத அளவுக்கு பெரும் குழப்பத்தில் சிக்கித் தவிக்க காரணம் கோஷ்டிப் பூசலே.

தமிழக காங்கிரஸ் கட்சி கோஷ்டிப் பூசலுக்குப் பெயர் போனது. ஒவ்வொரு கோஷ்டியினரும் தத்தமது ஆதரவாளர்களின் பட்டியலை வேட்பாளர் பட்டியலுடன் இணைத்து விட்டதால் குழம்பிப் போன காங்கிரஸ் மேலிடம் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்ய முடியாமல் குழம்பியது.

காங்கிரஸ் தலைவர் தங்கபாலு 2 வேட்பாளர் பட்டியலை சோனியாவிடம் கொடுத்தார். அகமது படேல், வயலார் ரவி, ஆஸ்கர் பெர்னாண்டஸ் ஆகியோர் பரிசீலனை செய்த பின்னரே இந்த பட்டியல்கள் தரப்பட்டன என்ற போதிலும், தங்கபாலு சொன்ன ஆட்களே இந்த பட்டியலில் நீக்கமற நிறைந்திருந்தனர்.

இதனால் முதலில் கொடுத்த பட்டியலை சோனியாவும், ராகுலும் ஏற்க மறுத்து விட்டனர்.

மேலும் 2 முறைக்கு மேல் எம்.எல்.ஏவாக இருந்தவர்களுக்கு சீட் கொடுக்க வேண்டாம் என்றும் சோனியா உத்தரவு போட்டு விட்டார். இதையடுத்து 2வதாக ஒரு பட்டியலை தங்கபாலுவை துணைக்கு வைத்துக் கொண்டு தயாரித்த காங்கிரஸ் குழு அதை சோனியாவிடம் கொடுத்தது. அதிலும் கூட தங்கபாலு கோஷ்டியினர்தான் ஆதிக்கம் செலுத்தியிருந்தனர். குறிப்பாக தங்கபாலு தனது மனைவிக்கே சீட் கேட்டிருந்தார்.

இதனால் டென்ஷன் ஆன ப.சிதம்பரமும், ஜி.கே.வாசனும் சோனியா காந்தியை நேரில் சந்தித்து குமுறி விட்டனர். இந்தப் பட்டியலை தயவு செய்து ஏற்க வேண்டாம். கட்சிக்காக உழைத்த யாருமே இதில் இடம்பெறவில்லை. இவர்களில் பலருக்கு மக்களுடன் எந்தத் தொடர்பும் இல்லை. எனவே இதை ஏற்க வேண்டாம் என்று கூறியுள்ளனர். இதைப் பரிசீலிப்பதாக உறுதியளித்த சோனியா காந்தி தற்போது இந்தப் பட்டியலையும் நிராகரித்து விட்டார்.

இதையடுத்து அகமது படேல், குலாம் நபி ஆசாத்தை வைத்துக் கொண்டு சோனியாவே பட்டியலை தயாரித்தார். இருப்பினும் தங்கபாலு கெஞ்சிக் கேட்காத குறையாக கோரியதால் அவரது மனைவிக்கு சீட் தர சோனியா சம்மதித்தாராம்.

மீண்டும் சட்டசபைத் தேர்தலில் திருநாவுக்கரசர்

இன்றைய பட்டியலில் முக்கியமானவர் திருநாவுக்கரசர். ஒரு காலத்தில் அறந்தாங்கி தொகுதியிலிருந்து தொடர்ந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் திருநாவுக்கரசர். எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தார்.

பின்னர் அதிமுக உடைந்து சிதறிய பின்னர் திருநாவுக்கரசர் தனிக் கட்சி நடத்தினார். பிறகு பாஜகவில் இணைந்து எம்.பி.யானார். அதன் பின்னர் அவர் சட்டசபைத் தேர்தலுக்குத் திரும்பவில்லை.

இந்த நிலையில் பல ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சட்டசபைத் தேர்தலில் நிற்கவுள்ளார் திருநாவுக்கரசர்.

பீட்டர் அல்போன்ஸ், யசோதா

மூத்த உறுப்பினர்களான பீட்டர் அல்போன்ஸ், யசோதா, ஞானசேகரன் உள்ளிட்டோருக்கும்ண்டும் சீட் கிடைத்துள்ளது.

அதேபோல வசந்தகுமார், விடியல் சேகர் போன்றவர்களுக்கும் சீட் கிடைத்து விட்டது. ராகுல் காந்தி படையைச் சேர்ந்தவர்களான யுவராஜா, ஜோதிமணி உள்ளிட்டோருக்கும் பிரதிநிதித்துவம் தரபப்ட்டுள்ளது.

மணிசங்கர அய்யரின் ஆதரவாளரான விஜயதரணிக்கு விளவங்கோடு கிடைத்துள்ளது. பழைய மூப்பனார் ஆதரவாளரான டாக்டர் செல்லக்குமார் மீண்டும் தி.நகரில் போட்டியிடுகிறார். ஞானசேகரன் மீண்டும் வேலூரில் நிற்கிறார். ஜெயந்தி நடராஜன் ஆதரவாளரான டாக்டர் காயத்ரி தேவி ஆலந்தூரில் போட்டியிடுகிறார்.

செல்வம் என்கிற செல்வப் பெருந்தகை

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து, பின்னர் பகுஜன் சமாஜ் கட்சிக்குத் தாவி, அங்கிருந்தும் வெளியேறி காங்கிரஸில் இணைந்த செல்வம் என்கிற செல்வப் பெருந்தகைக்கும் சீட் கிடைத்துள்ளது.
 

No comments:

Post a Comment