Friday, March 11, 2011

சென்னையில் கடும் பனி மூட்டம்: விமானங்கள், ரயில் சேவை பாதிப்பு!

சென்னையில் கடும் பனி மூட்டம்: விமானங்கள், ரயில் சேவை பாதிப்பு!

சென்னை: சென்னையில், நேற்று காலை ஏற்பட்ட கடும் பனி மூட்டத்தால் 5 விமானங்கள் மற்றும் மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.

தமிழகத்தில் பருவநிலை மாற்றம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மாற்றங்களுக்குள்ளாகி உள்ளது. கடந்த வாரம் சென்னையில் வெயில் அதிக அளவில் வாட்டத்தொடங்கியது. நேற்று முன்தினம் சென்னையில் வெயில் அளவு 100 டிகிரியைத் தொட்டது.

பொதுவாகவே மார்ச் மாதமானால் கோடையும் தொடங்கிவிடும்.

ஆனால் நேற்று காலை பருவநிலை நிலை திடீரென மாறியது. அதிகாலையில் இருந்தே கடுமையான மூடு பனி காணப்பட்டது. இதனால் சாலைகளில் முன்னால் செல்லும் வாகனங்கள் கூட தெரியாத அளவுக்கு தடுமாறினர் வாகன ஓட்டிகள்.

சென்னை மட்டுமின்றி, ஊத்துக்கோட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், பூந்தமல்லி போன்ற இடங்களிலும் இதே நிலை நீடித்தது.

ஊத்துக்கோட்டையில் காலை 8 மணி வரை வாகனங்கள் முகப்பு விளக்கு வெளிச்சத்தில் ஊர்ந்து சென்றன. சாலையில் நடந்து சென்றவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

விமானங்கள் தாமதம்:

பனி மூட்டம் காரணமாக சென்னையில் இருந்து நேற்று காலையில் புறப்பட வேண்டிய 5 விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. டெல்லிக்கு காலை 6-40 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் 7 மணிக்கு புறப்பட்டு சென்றது.

காலை 6-30 மணிக்கு செல்ல வேண்டிய கோவை விமானம் 6-45 மணிக்கு புறப்பட்டது. அது போல மும்பை, ஐதராபாத், கொச்சி செல்ல வேண்டிய விமானங்களும் தாமதமாக புறப்பட்டு சென்றன.

ரெயில்கள் ஊர்ந்து சென்றன:

ரெயில் பாதையில் பனி மூட்டம் காரணமாக சரியாக சிக்னல் தெரியவில்லை. எனவே, செங்கல்பட்டு-தாம்பரம்-கடற்கரைக்கு செல்லும் புறநகர் ரெயில்கள், காலை 4 மணி முதலே மெதுவாக சென்றன. சென்னைக்கு அதிகாலையில் வந்து சேரும் நீண்ட தூர ரெயில்களும் தாமதமாகவே வந்து சேர்ந்தன. காலை 7 மணிக்கு பின்தான் ஓரளவு நிலைமை சீரடைந்தது.

உலகளாவிய பருவநிலை மாற்றத்தின் எதிரொலிதான் இது என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment